திருப்பதி,
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் 2½ டன் மலர்களால் புஷ்ப யாகம் விமரிசையாக நடந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில்களில் பிரம்மோற்சவ விழாவைத் தொடர்ந்து புஷ்ப யாகம் நடத்தப்படும். பிரம்மோற்சவ பூஜைகள், தினசரி பூஜைகள், வாகனச் சேவைகள் போன்றவற்றில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏதேனும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகள் செய்திருந்தால், அதனால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக, இறைவனை சாந்தப்படுத்தும் வகையில் ஆகம விதிமுறைகளின்படி புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து இந்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து முடிந்த நிலையில், ஆகம விதிமுறைகளின்படி நேற்று மாலை புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக நேற்று காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ் வரருக்கு பால், தயிர், தேன், சந்தன கலவை மற்றும் இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம், தங்க நகைகள், பல வண்ணமலர்களால் அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து புஷ்ப யாகத்துக்காக கூடைகளில் கொண்டு வரப்பட்ட மலர்களுக்கு முதலில் மூலவர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அவை கோவில் வளாகத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அதன்பிறகு கோவில் வளாகத்தில் ஒரு இடத்தில் சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களை எழுந்தருள செய்தனர்.
தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேத மந்திரங்கள் மற்றும் பாரம்பரிய இசை முழங்க சுமார் 2½ டன் மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. அதில் துளசி, சாமந்தி, அரளி, தாழம்பூ, சம்பங்கி, ரோஜா மற்றும் தாமரை உள்ளிட்ட 18 வகையான மலர்களும், 6 வகையான புனித இலைகளும் உற்சவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. பல வண்ணமலர்களால் நடத்தப்பட்ட புஷ்ப யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் உற்சவர்கள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
புஷ்ப யாகத்தில் கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், உதவி அதி காரி தேவராஜுலு, கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி, கங்கணப்பட்டர் சூர்யகு மார் ஆச்சாரியார், கோவில் ஆய்வாளர் வேணுகோபால் மற்றும் பிறதுறை அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.