ஆரணி,
ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள ஆதி அரியாத்தம்மன் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக கோவில் அருகாமையில் 3 யாக மேடைகள், 3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 508 கலசங்களில் புனித நீர் நிரப்பி குரு பிரசாந்த் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள், குருக்கள் கலந்துகொண்டு வேத மந்திரங்கள் முழங்க 3 கால யாக ஹோம பூஜைகளை நடத்தினார்கள்.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை மங்கள வாத்தியங்களுடன் கோவிலை வலம் வந்து முகப்பு கோபுரத்தில் உள்ள அம்மனுக்கும், கருவறை கோபுரத்திற்கும், கருவறை ஆதி அரியாத்தம்மனுக்கும், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.