ஆரணி,
ஆரணி கோட்டை பகுதியில் அறம் வளர் நாயகி உடனுறை கைலாச நாதர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை இரு வேளையும் உற்சவர் திருவீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்குப் பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. சிவபுராணம் பாடியபடி திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதியெங்கும் பக்தர்கள் உப்பு, பொரி உருண்டை, மிளகு, சாக்லேட் போன்றவைகளை இறைத்து வழிபட்டனர். மேலும் வியாபாரிகள் ஆங்காங்கே அன்னதானம் வழங்கினர். நீர்மோர், பானகம், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவையும் வழங்கப்பட்டன.