அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே காரைக்குறிச்சியில் சவுந்தரநாயகி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பு அம்சமாகும்.
இதில் சித்திரை மாதத்தில் ஒரு முறையும், பின்னர் ஆவணி மாதத்தில் ஒரு முறையும் கருவறையில் உள்ள லிங்கத்திருமேனி மீது சூரிய கதிர்கள் விழும். தொடர்ந்து 5 நாட்கள் லிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் விழும். சூரிய பகவான் தனது கதிர்களை பாய்ச்சி லிங்கத்தை வழிபடுவதாக ஐதீகம்.
இந்த நிலையில் சித்திரை மாத சூரிய வழிபாடு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த 5 நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் படர்ந்தது. அப்போது லிங்கத் திருமேனி தங்கத்தை உருக்கி ஊற்றியது போல் தகதகவென மின்னியது. இந்த காட்சியை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.