வாராஹி அம்மன் 
ஆன்மிகம்

ஆஷாட நவராத்திரி விழா... தஞ்சை பெரிய கோவிலில் வாராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம்

ஆஷாட நவராத்திரி விழாவில் வாராஹி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

ஆனி மாத வளர்பிறை பிரதமை திதி முதல், நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள், 'வாராஹி நவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது. இது ஆஷாட நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி, தை மாத வசந்த நவராத்திரி, பங்குனி மாத சியாமளா நவராத்திரி ஆகியவற்றை விட, ஆனி மாதத்தில் வரும் இந்த நவராத்திரி, வாராஹி தேவியின் வழிபாட்டிற்கு உகந்த மிகவும் சக்தி வாய்ந்த நவராத்திரியாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு வாராஹி நவராத்திரியானது கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 23ஆம் தேதி வரை நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் வாராஷி அன்னை எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் சிறப்பாக விழா நடைபெறும். தஞ்சாவூர் பெரியகோவில் தனி சன்னதியில் உள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா மிக விசேஷமாக கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா, கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். நவதானிய அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம், குங்கும் அலங்காரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

அவ்வகையில், இன்று வாராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.

பிளாஞ்சேரி

கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வடக்கு பார்த்தவாறு சிம்ஹாருட வாராகி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். அங்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவாக இன்று காலை மஞ்சள் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிம்ஹாருட வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செந்தூர் அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

செந்தூர் அலங்காரத்தில் பிளாஞ்சேரி சிம்ஹாருட வாராகி அம்மன்

ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர்-வேங்கைவாசலில் அமைந்துள்ள 'ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்ரீ வாராஹி நவராத்திரி வைபவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ அஷ்டதசபுஜ துர்க்காதேவியை, ஸ்ரீவாராஹி அம்மனாக ஆவாஹனம் செய்து, 9 நாட்கள் மிக விசேஷமாக ஸ்ரீ வாராஹி நவராத்திரி பெருவிழா கொண்டாடப்படுகிறது.