பஹுதா யாத்திரை 
ஆன்மிகம்

கோவிலுக்கு திரும்புகிறார் பூரி ஜெகநாதர்... ‘பஹுதா யாத்திரை’ தொடங்கியது

தேரோடும் சாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, பகவானை தரிசனம் செய்தனர்.

பூரி,

ஒடிசாவின் கடற்கரை நகரமான பூரியில் ஆண்டுதோறும் ஜெகநாதர் ரத யாத்திரை வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து யாத்திரையில் பங்கேற்று பகவானை தரிசனம் செய்வார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டின் பூரி ரத யாத்திரை கடந்த 16-ம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட பிரமாண்ட தேர்களில் பகவான் ஜெகநாதர், அவரது சகோதரர் பாலபத்திரர் (பலராமர்), சகோதரி சுபத்திரை எழுந்தருளி, பிரதான கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள அவர்களின் அத்தை வீடாக கருதப்படும் குந்திச்சா கோயில் (குண்டிச்சா கோயில்) வந்து சேர்ந்தனர்.

பஹுதா யாத்திரை

அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த பிறகு, பகவான் ஜெகநாதர், பகவான் பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்திரை ஆகியோர், ஜெகநாதர் கோயிலுக்குத் திரும்பும் பயணத்தை குறிக்கும் பஹுதா யாத்திரை இன்று மாலை தொடங்கியது. ‘ஜெய் ஜெகந்நாத்" மற்றும் "ஹரிபோல்" என முழக்கம் எழுப்பியபடி பக்தர்கள் தேர் இழுத்தனர். தேரோடும் சாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, பகவானை தரிசனம் செய்தனர்.

பஹுதா யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரி முழுவதும் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் உட்பட 13,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.