சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 16-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
குண்டம் விழாவிற்கான பூச்சாட்டுதலைத் அம்மன் சப்பர ஊர்வலம் தொடங்கியது. பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் ஆகிய உற்சவ அம்மன்கள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
சிக்கரசம்பாளையத்தில் தொடங்கிய இந்த சப்பர வீதி உலா, இக்கரை நெகமம், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், அக்கரைதத்தப்பள்ளி, தாண்டாபாளையம்.கெஞ்சனூர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. திருவள்ளுவர் நகரில் வீதி உலா நிறைவடைந்ததும் நேற்று இரவு சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலை சப்பரம் வந்தடைந்து. இரவில் கோவிலில் அம்மனின் சப்பரம் இறக்கி வைக்கப்பட்டது.
இன்று (22.3.2026) ஞாயிற்றுக்கிழமை தண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு சப்பர வீதிஉலா தொடங்கியது. தாரை தப்பட்ட முழங்க வடக்குப்பேட்டை, சந்தனக்கிடங்கு வீதி, திருநீலகண்டர்வீதி, கடைவீதி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்ளு அருள்பாலித்தார். இன்று இரவு வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சப்பரம் இறக்கி வைக்கப்பட்டு, நாளை திங்கட்கிழமை முழுவதும் சத்தியமங்கலத்தின் பல்வேறு பகுதிகளில் சப்பர வீதி உலா நடைபெறும்.