சென்னை,
சென்னை வில்லிவாக்கத்தில், சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவ திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஏழாவது நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சவுமிய தாமோதர பெருமாள் எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளிய பெருமாள், முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கேடய உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, சிறிய மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பால், இளநீர், நறுமணக் கலவை உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சுவாமி, தாயார் மற்றும் சுதர்சன சக்கரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.