பூத வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள் 
ஆன்மிகம்

திருவீழிமிழலையில் சித்திரை திருவிழா- பூத வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா

திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலமான திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் கடந்த 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் தொடர்ந்து விழா நடைபெறும்.

விழாவில் நேற்று காலை திருஞானசம்பந்தர் நாயனார் திருமுலைப்பால் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திருமால் ஆயிரம் தாமரை மலர்களோடு ஆலயத்திற்கு எழுந்தருளி இறைவனை பஞ்சாட்சர சகஸ்ர நாம அர்ச்சனை செய்து சிவபெருமானிடம் சக்கராயுதம் பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தியாகராஜ பெருமானின் திருநடன நிகழ்ச்சியும் நடந்தது. இரவு விஸ்வகர்ம சமூகத்தார் சார்பில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பஞ்ச மூர்த்திகள் பூத வாகனத்தில் திருவீதி உலா காட்சி நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி- அம்பாளை வழிபட்டனர்.