கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 108 வைணவத் தலங்களில் மூன்றாவது பெரிய தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலாகும். இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், திருத்தேர் மற்றும் திருவாபரணம் என அனைத்திலும் பாடல் பெற்று விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
பல்வேறு சிறப்பு பெற்ற சாரங்கபாணி கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பெருமாள், வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணி அளவில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் சக்கரபாணி உடன் சேர்ந்து சாரங்கபாணியும் ஓலைச் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சாரங்கபாணி கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.