கும்பாபிஷேக விழா 
ஆன்மிகம்

கோவை: ஸ்ரீவாரி கார்டன் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கோவை,

கோவை பேரூர்செட்டிப்பாளையம் ஊராட்சி, இபி காலனி ஸ்ரீவாரிகார்டன், ஆயகவுண்டர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நேற்று முன்தினம் (13.9.2026) காலையில் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

யாகசாலை பூஜை

தொடர்ந்து புண்யாகவாஜனம், கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கை, லட்சுமி சரஸ்வதி பூஜை ஹோமம், தன பூஜை, நவகிரஹ பூஜை ஹோமம், தன்வந்திரி பூஜை ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின் புற்றுமண் எடுத்து வந்து கங்கணம் கட்டப்பட்டது. முளைப்பாரி, பஞ்சதீர்த்த கலசங்கள் விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஊர் சுற்றி ஆலயம் வந்தடைந்தன.

மாலையில் வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பூஜையின் நிறைவில் பூர்ணாஹுதி, தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8 மணியளவில் யந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று (14.9.2026) அதிகாலை 5 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. பூஜையின் நிறைவில் மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், காலை 6.45 மணியளவில் விமான கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் தச தரிசனம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விழாக்குழு தலைவர் பி.விஜயரங்கன், செயலாளர் க.பவித்ரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT