ஆன்மிகம்

சோலைமலை முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

நாளை காலை 5.45 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது.

மதுரை,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடு எனும் பெருமை கொண்டது மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை மீது உள்ள சோலை மலை முருகன் கோவில் ஆகும். இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு பாலாலய விழா நடந்தது. அதன் பிறகு திருப்பணி வேலைகள் நடந்து முடிந்தது.

பின்னர் கடந்த மார்ச் மாதம் கோவில் வளாகத்தில் யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது. யாகசாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த 1-ந் தேதி முதல் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சிவாச்சார்யார்களின் வேதமந்திரங்களுடன் தொடங்கியது.

நாளை கும்பாபிஷேகம்

தொடர்ந்து நேற்று முன்தினம், நேற்று என பல்வேறு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று(சனிக்கிழமை) 5-வது கால பூஜைகள் நடை பெறும். தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை விநாயகர் பூஜையுடன் நடைபெறுகிறது.

பின்னர் காலை 5.15 மணிக்கு மகா பூர்ணாகுதி நிறைவு பெற்றதும் புனித தீர்த்தக்குடங்கள் புறப்பாடாகும். தொடர்ந்து 5.45 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சோலை மலை முருகன் கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.