பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கல்கூடப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கஜமுக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் நடந்து முடிந்த நிலையில், நேற்று கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம் மற்றும் யாக சாலை பூஜை, ரக்ஷாபந்தன, நாடிசந்தனம் செய்யப்பட்டு பூர்ணாஹதி நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் இன்று காலையில் நிறைவு பெற்றதையடுத்து, யாகசாலையிலிருந்து புனித தீர்த்தகலசத்தை எடுத்து சென்று அந்த புனித நீரால் கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கஜமுக விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.