சிறப்பு அலங்காரத்தில் சேங்கல்மலை வரதராஜ பெருமாள் 
ஆன்மிகம்

பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் முக்கியமான தினம் ஏகாதசி ஆகும். தீவிர பக்தர்கள் அன்றைய தினம் விரதம் இருந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்து வழிபடுகிறார்கள். இந்த நாளில் பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது பலன் தரும். ஏகாதசி தினத்தன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அவ்வகையில், பங்குனி மாத தேய்பிறை ஏகாதிசியை யொட்டி இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமரவைத்து கோவிலை சுற்றி வலம் வரச் செய்தனர்.

ஏகாதசி விரதம் இருந்த பக்தர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் வாங்கல், ஆத்தூர் பெருமாள் கோவில்களிலும் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.