விழுப்புரம்,
ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் இன்று மயிலம் முருகன் கோவிலில் சுமார் 150 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
ஆடி முடிந்து ஆவணி மாதத்தின் முகூர்த்த நாளையொட்டி விழுப்பும் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோவிலில் இன்று ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை முதலே மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டது.
வேதமந்திரங்களும், கெட்டி மேளமும் முழங்க, பாரம்பரிய முறைப்படி சுமார் 150 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கோவிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே சமயம், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.