சென்னை,
பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இதனால் தீவிர பக்தர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம்.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் மற்றும் பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும், ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகமாகும்.
இந்த நிலையில், இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு அபிஷே, ஆராதனைகள் நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்திவரதர் கோவில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து உலகளந்த பெருமாள், யதோத்தக்காரி பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், அழகிய சிங்கப்பெருமாள், பச்சை வண்ணப் பெருமாள், பவளவண்ண பெருமாள், நிலா துண்ட பெருமாள், ஆதிகேச பெருமாள், திரிநீரகத்தான் பெருமாள், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள வீரராகவப் பெருமாள், திருமுக்கூடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், பழைய சிவரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள், உத்திரமேரிலுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷே, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று சந்தன காப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.