தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்த முருகப்பெருமான் 
ஆன்மிகம்

வடபழனி முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா

தெப்பத் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் லட்சார்ச்சனை மற்றும் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு பங்கு உத்திரத்தையொட்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது.

விழாவில் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணி அளவில் நடந்த முதல்நாள் தெப்பத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இரண்டாம் நாள் தெப்பத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணி அளவில் நடக்கிறது. தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் எழுந்தருள்கிறார். 3-ம் நாளான நாளை (சனிக்கிழமை) தெப்பத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழா வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் யாகங்களும், ஆறுகால பூஜைகளும் தினசரி நடக்கின்றன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்பதால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.