இந்து சமயத்தில் எந்தவொரு செயலை செய்ய தொடங்கும் முன்பும், முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். காரணம், செய்யும் காரியங்கள் தடைகள் இன்றி வெற்றிகரமாக நடைபெற அருள்புரிபவர், விநாயகப் பெருமான்.
இவ்வாறு விநாயகரை வழிபடும்போது அவருக்கான மந்திரங்களை உச்சரித்து வழிபடுவது கூடுதல் பலனை பெற்றுத்தரும். தினமும் விநாயகர் மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.
அவ்வகையில் பத்ம புராணத்தில் விநாயகரைப் போற்றும் மந்திரத்தை பார்ப்போம்.
ஓம் நமோ கணபதயே நமஹ
கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:
த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:
விநாயகஸ்சாருகர்ண: பஸூபாலோ பவாத்மஜ:
பொருள்:-
'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத கணங்களுக்கு தலைவனாக விளங்குபவரே, இடையூறுகள் இல்லாது செய்பவரே, அழகான நீண்ட துதிக்கையை உடையவரே, யானை முகம் படைத்தவரே, கங்கா, கவுரி என இரண்டு தாய்களை கொண்டவரே, பக்தர்களுக்கு குறைவில்லாமல் அருள்புரிபவரே, ஒரு தந்தத்தை உடையவரே, பெரிய காதுகளை கொண்டவரே, உலக மக்களை காப்பவரே, பரமனின் புத்திரனே, உனக்கு வணக்கம். எங்கள் தடைகளை எல்லாம் விலக்கி, நிம்மதி பெருவாழ்வு வாழ வழிநடத்துவீராக.
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்"
பொருள்:- முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டனை நினைத்து (சுருண்ட தும்பிக்கை உடையவன்) தியானம் செய்கிறோம். தந்தத்தை உடைய அந்த விநாயகப் பெருமான், நமது அறிவையும் செயலையும் ஊக்குவித்து நம்மை வழிநடத்தி வெற்றி பெறச் செய்வாராக.
விநாயகப் பெருமானை வழிபடும்போது அவருக்கான மந்திரங்கள் சொல்லி, அர்ச்சனைகள் செய்வதுடன், கணேச காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வழிபட்டால் காரிய வெற்றியும், எல்லா வளங்களும் பெறலாம். விநாயகப் பெருமான் பக்தர்களின் அறிவையும் செயலையும் ஊக்குவித்து வழிநடத்தி வெற்றி பெறச் செய்வார் என்பது ஐதீகம்.