விநாயகர் சிலை கரைப்பு 
ஆன்மிகம்

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம்... நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நீர்நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இவ்வாறு பூஜிக்கப்பட்ட சில சிலைகள் ஏற்கனவே கரைக்கப்பட்டுவிட்டன.

பெரும்பாலான பிரமாண்டமான விநாயகர் சிலைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. அந்தந்த பகுதிகளில் காவல்துறை அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்று, அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைக்கின்றனர்.

விநாயகர் சிலை கரைப்பு

சிலைகள் கரைப்பு

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் ஏராளமான விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

சிலைகளை கரைப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் ஊர்வலம் அந்த பகுதிகளை நெருங்கியதும், கிரேன்கள் மற்றும் டிராலிகள் மூலமாக சிலைகள் கடற்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன. கடற்கரையில் இருந்து படகுகளிலும் சிலைகளை கொண்டு சென்று கரைத்தனர்.

SCROLL FOR NEXT