கருட வாகனத்தில் பொலிந்து நின்றபிரான், அன்ன வாகனத்தில் நம்மாழ்வார். 
ஆன்மிகம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை

கருட வாகனத்தில் பொலிந்து நின்றபிரான், அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தென்திருப்பேரை,

நவதிருப்பதிகளில் 9 வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டின் வருஷாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 10 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீதேவி‌ பூதேவி, ஆதிநாயகி குருகூர் நாயகி தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். நம்மாழ்வார் பெரிய கோவிலில் எழுந்தருளினார். பின்னர் அலங்காரம், தீபாராதனை நடந்தது.

கருட சேவை

நாலாயிர திவ்ய பிரபந்த சேவா காலம் சேவித்தனர். சாத்துமுறை நடைபெற்று தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சையைத் தொடர்ந்து உற்சவர் பொலிந்து நின்ற பிரான், நம்மாழ்வார் வாகனகுறட்டிற்கு எழுந்தருளினார்கள்.

7.30 மணிக்கு கருட வாகனத்தில் பொலிந்து நின்றபிரான், அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் எழுந்தருளினர். 8 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர்கள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.