மாமல்லபுரம்,
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 1-ந்தேதி துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சிறப்பு உற்சவங்கள், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய உற்சவமான கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் நித்யகல்யாண பெருமாள் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10-ந்தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
நித்யகல்யாண பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில், 62-வது திவ்ய தேசமாக விளங்குகிறது. இங்கு ஆதிவராக பெருமாள், தினம் ஒருவர் என ஆண்டு முழுவதும் மணந்த மனைவியரை, அகிலவல்லி தாயாராக ஒன்றிணைத்து, இடது தொடையில் ஏந்தி மூலவராக வீற்றுள்ளார். நித்யகல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடன் உற்சவராக வீற்றுள்ளார். ரங்கநாதர் உள்ளிட்ட பிற சுவாமியரும் இங்கு வீற்றுள்ளனர்.