பல்லி சாஸ்திரம் 
ஆன்மிகம்

பல்லி சாஸ்திரம்.. உடலின் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன்?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லி சிற்பங்களை வழிபடுவது பிரபலம்.

ராசி, நட்சத்திரம், கிழமை, திதி, யோகம், கரணம் போன்ற அம்சங்களை வைத்து கணக்கிட்டு பஞ்சாங்க பலன்கள் கணித்துச் சொல்லப்படுகின்றன. இதேபோன்று பல்லியை அடிப்படையாக வைத்தும் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

இறைவன் நன்மை, தீமைகளை சில குறிப்புகள் மூலமே அறிவுறுத்துவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. காகம் கத்துவது, பல்லி கத்துவது, உடலில் பல்லி விழுவது, காகம் தலையில் அடிப்பது என்பது போன்ற சில குறிப்பிட்ட அறிகுறிகளால் கடவுள் எச்சரிக்கை விடுப்பதாக சொல்லப்படுகிறது. இவற்றின் பலன்களை கணித்து சொல்வதற்காக சில சாஸ்திர முறைகள் முந்தைய காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் பல்லி விழுவது. இது பல்லி சாஸ்திரம் அல்லது கௌளி சாஸ்திரம் எனப்படுகிறது.

நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் பல்லி விழுந்த பலன்கள் 7 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. பல்லி சாஸ்திரங்கள் சொல்லும் பலன்களின் அடிப்படையில் தலை, மூக்கு, முகுது, தொடை, பாதம் போன்ற பாகங்களில் பல்லி விழுந்தால் அது அபசகுனமாக கருதப்படுகிறது. இவற்றில் விழுந்தால் தீய பலன்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

இதேபோல் ஆன்மிக ரீதியாகவும் வழிபாட்டில் பல்லிக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. நாம் இறைவனிடம் முக்கியமான விஷயமாக முறையிடும்போதோ, அல்லது நல்ல காரியங்கள் குறித்து பேசும்போதோ பல்லி சத்தமிட்டால் நல்ல சகுனமாக கருதப்படும், நம்முடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும், அதற்கு கடவுள் ஒப்புதல் அளித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்ல காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லி சிற்பங்களை வழிபடுவது பிரபலம். பல்லியின் உருவத்தை தொட்டு வழிபடுவதால் உடலில் பல்லி விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், துன்ப நிலை மாறி, நன்மைகள் நடைபெற துவங்கும் என்பது நம்பிக்கை. இதேபோல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் பல்லி வழிபடப்படுகிறது.

இதுதவிர நம்முடைய வீட்டில் இருக்கும் பல்லிகள் கத்தும் நேரம், திசை ஆகியவற்றை வைத்தும் பலன்கள் சொல்வார்கள். பல்லி நம்முடைய உடலில் விழுவதற்கும் பலன்கள் உண்டு. இது ஆண், பெண் அனைவருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும் என்றாலும் உடலின் இடப்பாகம், வலப்பாகம் என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

உடலின் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன்..?

தலை- கெட்ட சகுனம், மற்றவர்களுடன் சண்டை, உறவினர்களின் மரணம், மனதில் குழப்பம்

இடதுபுற நெற்றி- புகழ் மற்றும் கீர்த்தி உண்டாகும்.

வலதுபுற நெற்றி- லட்சுமி கடாட்சம் உண்டாகும்

முகம்- உறவினர்கள் வருகையை குறிக்கும்

புருவம்- அரசாங்க பதவியில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.

இடது கண்- சுகம் உண்டாகும்

வலது கண் - தண்டனை கிடைக்க வாய்ப்பு

மூக்கு- நோய் ஏற்படும், பிரச்சினை உண்டாகும்.

வலது காது- நல்ல ஆயுளை குறிக்கும்

இடது காது- வியாபார உயர்வு கிடைக்கும்

கழுத்தின் இடதுப்பக்கம்- காரிய வெற்றி கிட்டும்

கழுத்தின் வலதுப்பக்கம்- பகை உண்டாகும்.

இடது மார்பு- சுகம் உண்டாகும்.

வலது மார்பு- லாபம் உண்டாகும்.

வயிறு- தானிய லாபம் ஏற்படும்.

தொப்புள் - விலை மதிப்புள்ள நகைகள் வாங்கும் யோகம்.

இடதுபக்க தோள் - சுகபோகம் ஏற்படும்.

வலதுபக்க தோள்- வெற்றி உண்டாகும்.

இடது கை மணிக்கட்டு - நல்ல செய்தி வரும்.

வலது கை மணிக்கட்டு- உடல்நலம் பாதிக்கபடும்.

முதுகு - கவலை, துன்பம் ஏற்படும்.

தொடைப்பகுதி - பெற்றோர்கள் அல்லது வயதானவர்களுக்கு தீங்கு ஏற்படும் அறிகுறி

இடது பக்க முழங்கால் - சுகம் உண்டாகும்

வலது பக்க முழங்கால் - பயணம் மேற்கொள்வதற்கான அறிகுறி

வலது பாதம் - நோய் ஏற்பட வாய்ப்பு

இடது பாதம் - துக்கம் நேரிட வாய்ப்பு

Also read:சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து

பரிகாரம்

தோஷம் அல்லது தீய பலன்களை தரக்கூடிய உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் உடனடியாக தலைக்கு குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி முடியாதவர்கள் தங்களின் வீட்டில விளக்கேற்றி வைத்து, இஷ்ட தெய்வத்தை மனதார வழிபடலாம்.

இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் தீய பலன்கள் குறைந்து, நன்மைகள் அதிகரிக்கும்.

குறிப்பாக காஞ்சிபுரம், திருச்சி, திருப்பதி கோவில்களுக்கு சென்று அங்குள்ள பல்லி உருவத்தை வழிபடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

Also read:வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் மனைப்பொருத்தம்