ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை கோலாகலம்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கருடசேவை ஒத்திகை நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு பவுர்ணமி கருடசேவை மற்றும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ஒத்திகை நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது.

கருடசேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15 முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதையொட்டி நேற்று இரவு மாத பவுர்ணமியையொட்டியும், வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கருடசேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) ஒத்திகை நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது.

இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்த கருடசேவையின்போது, திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா.ரவிச்சந்திரா, கூடுதல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி, திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு ஆகியோர் கோவிலின் நான்கு மாட வீதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வினியோகம், அன்னப்பிரசாதம் வழங்குதல், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களின் சேவைகள், பக்தர்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

மலையப்பசாமி வீதிஉலா

கருட வாகனத்துக்கு முன்னால் யானைகள் கம்பீரமாக அணிவகுத்துச் செல்ல, பக்தர்கள் குழுக்களாக சொக்க பஜனை பாடினர். பெண்கள் கோலாட்டம் ஆடினர். மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகி லும் கற்பூர ஆரத்தி காண்பித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

1 கருட வாகனச் சேவையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நன்னபனேனி. சதாசிவராவ், சாந்தாராம், பக்தி சேனல் தலைவர் ஸ்ரீதர் வர்மா, தலைமை பொறியாளர் மனோகரன், கோவில் துணை அதிகாரி லோகநாதன். பறக்கும் படை அலுவலர் சுரேந்திரா உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.