தஞ்சாவூர்,
கும்பகோணம் அருகே தாராசுரம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் அக்னி ஆணி மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆணி தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தினமும் திரவுபதி அம்மனின் திருநடன வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், மகாசக்தி ஹோமம் நடந்தது. மாலை அரசலாற்றில் இருந்து சக்தி கரகம், வீரபத்திர மகாசூலம், சடையப்ப முனீஸ்வர மகா வேல், அம்மனின் திரிசூலம் அலகு காவடி, அக்னி கொப்பரை ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து சூடேற்றப்பட்ட ஆணி (அக்னி ஆணி) மீது பக்தர்கள் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவிலின் முன்பு சாலையின் நடுவில் ஏராளமான ஆணிகள் பதிக்கப்பட்டு, 21 அடி நீளத்தில் அக்னி குண்டம் போன்று அமைக்கப்பட்டு, இருபுறமும் அக்னி வளர்க்கப்பட்டது. இதில் ஆணிகள் சூடேறிய பின்னர் ஆணிகளின் மீது நடந்து சென்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அப்போது அம்மன் கரகம் முதலில் செல்ல, அதைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.