ஆன்மிகம்

விடுமுறை தினம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம்

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிறு விடுமுறை நாளான இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பொதுவாக விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் விழா நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்களிலும் வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் ஞாயிறு விடுமுறை தினமான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.