சோழவந்தான்,
சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். இங்கு குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நேற்று காலை 10.30 மணியளவில் லட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்கியது. விழாவில் கருப்பையா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகி வக்கீல் தியாகராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று (திங்கட்கிழமை) லட்சார்ச்சனை விழா தொடர்ந்து நடைபெறும். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் பரிகார மகாயாகம் நடக்கிறது. தொடர்ந்து 11.08 மணியளவில் மிதுனம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கு குருபகவான் குருப்பெயர்ச்சி ஆவதால் குருபகவானுக்கு 21 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பரிகார யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும்.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.