ஸ்நாபன திருமஞ்சனம் 
ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் தொடக்கம்

திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.

திருப்பதி,

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆஷாட மாதத்தில் மூன்று நாட்கள் ஜேஷ்டாபிஷேக மகோற்சவம் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேக மகோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) பக்தி பரவசத்துடன் தொடங்கியது.

இதையொட்டி சுப்ரபாத சேவைக்குப் பிறகு நித்ய ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆகம விதிமுறைகளின்படி சதகலச ஸ்நாபனம் மற்றும் மகாசாந்தி ஹோமம் நடத்தப்பட்டது.

பின்னர், கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் இளநீரால் ஸ்நாபன திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கவசாதிவாசம் நிகழ்வின் ஒரு பகுதியாக பெருமாளின் திருக்கவசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

வாகன வீதி உலா

மாலை 5.30 மணிக்கு, உற்சவமூர்த்திகள் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

இந்நிகழ்வில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோயில் உதவி நிர்வாக அலுவலர் (AEO) நாராயண சௌத்ரி, கோயில் ஆய்வாளர் தனஞ்செயலு, அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.