காரைக்குடி,
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 67 ஆண்டுகளாக பக்தர்கள் உதவியோடு 44 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான மாசி பங்குனி பெருவிழா கடந்த மாதம் பூச்சொரிதலுடன் துவங்கியது. பெரும்பாலான பக்தர்கள் அன்று முதலே விரதம் இருக்க ஆரம்பித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு காப்பு கட்டப்பட்டது. விழாவின் முத்தாய்ப்பாக அடுத்த வாரம் 18-3-2026 புதன்கிழமை பால்குடத் திருவிழா விமரிசையாக நடைபெறும். அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தியும், பூக்குழி இறங்கியும், கரகம் மற்றும் முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காப்பு கட்டிய நாளான இன்று முதலே பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்த தொடங்கினர்.
திருவிழாவை முன்னிட்டு காரைக்குடியில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.