திருவண்ணாமலை பூத நாராயணப் பெருமாள் 
ஆன்மிகம்

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாலமுருகனுக்கு கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மாட வீதியில் மிகப் பழமையான பூத நாராயணர் கோவில் அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்ப பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார் பகவான். குபேர வடிவில் அமைந்துள்ள இந்த பெருமாளுக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சிவபுரம் சிவன் கோவில்

நாகர்கோவில்

நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் தேய்பிறை அஷ்டமி விழா விமரிசையாக நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு காலை 8 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை பூர்ணாஹுதி உட்பட ஹோம பூஜைகள் நடைபெற்றன. ஹோம பூஜைகளை தொடர்ந்து மகாவிஷ்ணுவுக்கு மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அலங்காரம் மற்றும் அலங்கார தீபாராதனை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகாவிஷ்ணுவை வழிபட்டனர்.

அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கால பைரவர் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 11 மணிக்கு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 12 மணிக்கு அலங்காரம், அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிவபெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் பதிவு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

கிருஷ்ணர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர்

பாலசுப்பிரமணியருக்கு கிருஷ்ணர் அலங்காரம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பக்கம் உள்ள வெள்ளோட்டில் பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் பாலமுருகன் சுவாமிக்கு, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. எப்போதும் வேலுடன் காட்சி தரும் பால சுப்பிரமணியர், இன்று புல்லாங்குழல் ஏந்தி, கிருஷ்ணர் போல் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கிருஷ்ண ஜெயந்தி பூஜை நிகழ்ச்சியில் வெள்ளோடு, பெருந்துறை, சென்னிமலை முதலான பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு, கிருஷ்ணர் உருவில் காட்சி தந்த பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தனர்.

குருவாயூர் கிருஷ்ணன் அலங்காரம்

போடி சீனிவாச பெருமாள்

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சந்தான கோபால கிருஷ்ண சுவாமிக்கு 16 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கு குருவாயூர் கிருஷ்ணன் போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

எட்டெழுத்து பெருமாள் கோவில்

திருநெல்வேலி உடையார்பட்டி அருகில் அருகன்குளம் கிராமத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பூஜையின்போது கிருஷ்ண கலய பிரசாதம் வழங்கப்படுவது இக்கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். பக்தர்கள் அந்த கலயத்தை வீட்டுக்கு வாங்கிச் சென்று அதில் சிறிது தங்கம், வெள்ளி, அல்லது நாணயங்கள் போட்டு அதை பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

கோவை கணபதி வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்கி, சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று காலை ஹோமம் அதைத் தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. உற்சவமூர்த்தி, பாமா ருக்மணி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT