ஆன்மிகம்

கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேர் திருவிழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு

தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கிராம தேவதை கடவுளான ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று விமரிசையாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று மூலவர் அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, வண்ணமயமான மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று திருத்தேர் விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை முதல் உற்சவ அம்மன் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து உற்சவ அம்மனை, கோவிலின் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர். சிறப்பு பூஜைக்குப் பின்னர் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். திருத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.

விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.