தென்காசி,
பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி ஸ்ரீ மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்து, கடந்த 25-ஆம் தேதி கும்பாபிஷேக விழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்றைய தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
26-ஆம் தேதி நவாவரண பூஜை, சுமங்கலி பூஜை, தன பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இரவு பீடசுத்தி, ரத்தின நியாசம், யந்திர ஸ்தாபனம், விமான கலச பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் மற்றும் கர்ப்பகிரகத்தில் பிம்ப பிரதிஷ்டை நடைபெற்றது.
27-ஆம் தேதி காலை கும்ப பூஜைகள், நாடி சந்தானம், ஜீவ நியாசம், சிலைகளுக்கு கண் திறப்பு, தச தரிசனம், அஷ்டாபிஷேகம் மற்றும் யாக மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித கடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, காலை 10.30 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கோபுர சிகர கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 11.30 மணிக்கு ஏககாலத்தில் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.