கன்னியாகுமரி,
குழித்துறையில் கொட்டும் மழையில் நனைந்தபடி விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கடந்த 14 -ம் தேதி விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு தினமும் பூஜை செய்யப்பட்டது. பூஜையின் நிறைவில் இன்று காலை மேல்புறம் அளப்பன்கோடு ஈஸ்வர கால பூதத்தான் திருக்கோவிலிருந்து விநாயகர் ஊர்வலம் ஆரம்பமானது.
ஊர்வல துவக்க நிகழ்ச்சியில் இந்து முன்னணி மேற்புறம் ஒன்றிய தலைவர் அருண் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராம் பிரகாஷ் வரவேற்றார், மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 125 சிலைகள் கொண்டுவரப்பட்டன. மேலும் வீடுகளில் பூஜை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட கைப்பிள்ளையாரும் ஊர்வலத்தில் பங்கேற்றன. இந்த ஊர்வலம் வட்டவிளை, கழுவந்திட்டை, வெட்டுவெந்நி வழியாக, குழித்துறை விஎல்சி மைதானம் வந்தடைந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின்போது லேசான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் விநாயகர் சிலைகளை எடுத்துச்சென்று ஆற்றில் கரைத்தனர்.
குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் மார்த்தாண்டம் பம்பத்திலிருந்து விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்திற்கு குழித்துறை நகர இந்து முன்னணித் தலைவர் வினு தலைமை வகித்தார். குழித்துறை நகர பாஜக தலைவர் சுமன் முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர்கள் விஜூ, ரத்தினமணி, மினி குமாரி, ஜெயந்தி, பாஜ நிர்வாகி ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மார்த்தாண்டம் ஜங்ஷன், வெட்டு வெந்நி, குழித்துறை ஜங்ஷன், தபால் நிலைய சந்திப்பு வழியாக விஎல்சி மைதானம் கொண்டுவரப்பட்டு தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில் 18 சிலைகள் பங்கேற்றன.
இதேபோல் இந்து முன்னணி சார்பில் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த 121 விநாயகர் சிலைகள் கருங்கல், கூனாலுமூடு பகுதிக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலமாக ஆடல், பாடல், மேளதாளங்களுடன் பாலூர், பாலவிளை மங்கலகுன்று, உதயமார்த்தாண்டம் வழியாக மிடாலம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பூஜைகள் முடித்த பின் விநாயகர் சிலைகள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டன. இந்த விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.