சிறப்பு பூஜை 
ஆன்மிகம்

வடபழனி முருகன் கோவிலில் லட்சார்ச்சனை தொடங்கியது.. ஒரு நபருக்கு ரூ.250 கட்டணம்

லட்சார்ச்சனை நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வேதபாராயணம் செய்யப்படுகிறது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் லட்சார்ச்சனை, தெப்பத்திருவிழா நேற்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. ஏப்ரல் 4-ந்தேதி வரை திருவிழா நடக்கிறது. லட்சார்ச்சனையும், யாகசாலை பூஜைகளும் நேற்று தொடங்கியது. திரளான பக்தர்கள் பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் லட்சார்ச்சனை நிறைவடைகிறது.

ஏப்ரல் 1-ந்தேதி பங்குனி உத்திரத்தன்று உச்சிக்காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கலசாபிஷேகத்துடன் பூஜைகள் நிறைவடைகின்றன. அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது.

லட்சார்ச்சனை நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வேதபாராயணம் செய்யப்படுகிறது.

வடபழனி முருகன் கோவில்

ஏப்ரல் 2-ந்தேதியிலிருந்து 4-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது. சிறப்பு அலங்காரத்துடன் வேதபாராயணம், திருமுறை மற்றும் நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது.

லட்சார்ச்சனையில் பங்கேற்க நபர் ஒன்றுக்கு ரூ.250 கட்டணச்சீட்டு வழங்குமிடத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.