மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. அப்போது மீனாட்சி, சுந்தரரேஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அங்கு எழுந்தருளி காட்சி அளித்தனர்.
இவ்விழா வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது. 10-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை கோவிலுக்குள் 2-ம் பிரகாரத்தில் சந்திரசேகர சுவாமி வீதி உலா நடைபெற்றது.
ஆவணி மூலத் திருவிழாவில், திருவிளையாடல் லீலை நடைபெறும் முக்கிய உற்சவம் இன்று தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது. சுவாமி கருங்குருவிக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த திருவிளையாடல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
ஒருவன் முற்பிறவியில் புண்ணிய காரியங்கள் பல செய்தபோதிலும் சிறிது பாவம் செய்ததால், அவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிக்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து தன்னுடைய நிலையை எண்ணி மிகவும் வருந்தியது.
அச்சமயம் அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர் மதுரையின் சிறப்பு பற்றியும், பொற்றாமரைக்குளத்திலே நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்றும் பேசிக்கொண்டிருந்தனர். அதைக் கேட்ட கருங்குருவி நேராக மதுரைக்கு பறந்து பொற்றாமரைக்குளத்திலேயே நீராடி இறைவனை வணங்கியது. இதைக் கண்ட இறைவன் குருவியின் பக்திக்கு இறங்கி மிருத்யுஞ்சிய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இறைவன் கருங்குருவியின் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கினார் என்று கூறப்படுகிறது.
திருவிளையாடல் லீலை உற்சவத்தில் நாளை (17-ந் தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், 18-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 19-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 20-ந் தேதி உலவாக்கோட்டை அருளியது, 21-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை நடைபெறுகிறது.
22-ந் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு சுந்தரேஸ்வரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 24 ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 25 ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 26 ந் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். 27-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.