கோப்புப்படம்  
ஆன்மிகம்

சபரிமலையில் 14-ந்தேதி மகர சங்கிரம பூஜை - சன்னிதானத்தில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் மகர ஜோதியை தரிசிக்க சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சபரிமலை,

மகர விளக்கையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டது. 31-ம் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது. உடனடி தரிசன முன்பதிவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தற்போது, தினசரி 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக, பம்பை முதல் சன்னிதானம் வரையில்,5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் 10 மணி முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். மகர விளக்கு நெருங்குவதை முன்னிட்டு, ஜோதியை காண, சாமி தரிசனத்துக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் இப்போதிருந்தே சபரிமலையில் ஆங்காங்கே முகாமிட்டு தங்கி வருகின்றனர். இதனால் சன்னிதானம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் 24 மணி நேரமும் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில், மகர விளக்கையொட்டி 14-ந் தேதி பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும் போது மகர சங்கிரம பூஜை வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். அபிஷேகத்துக்கு, திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக வழிபாட்டை முன்னிட்டுஅன்றைய தினம் பிற்பகல் 2.50 மணிக்கு நடை திறக்கப்படும்.

SCROLL FOR NEXT