மதுரை,
சோலை மலை முருகன் கோவிலில் மண்டலாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடான அழகர் மலையில் உள்ள சோலை மலை முருகன் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து தினமும் கோவிலில் பூஜை நடந்து வந்தது. இந்த பூஜைகளின் சிகர நிகழ்வாக, நேற்று சஷ்டி மண்டப வளாகத்தில் 48-வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் நடந்தன. நட்சத்திரம் மற்றும் ஓம் வடிவில் 1008 சங்குகள் அடுக்கப்பட்டு அதில் புஷ்பங்கள் இணைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து புனித தீர்த்த கலசங்கள் வெள்ளி மயில் வாகனத்தில் மேளதாளம் முழங்க வர்ணக்குடை தீவட்டி பரிவாரங்களுடன் சன்னதி பிரகாரம் சுற்றி வந்து மூலவர் சன்னதியை அடைந்தது.
அங்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகர் மற்றும் ஆதி வேல் சன்னதியிலும் புனித தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.