திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்று தரிசனம் செய்த பக்தர்கள் 
ஆன்மிகம்

மாசி பிரம்மோற்சவ விழா.. திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

திருக்கல்யாணத்தின்போது குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு மேளதாள வாத்தியங்களுடன் சீர்வரிசை கொண்டு வந்தனர்.

திருத்தணி:

ஆறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, இரவு என இருவேளைகளில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 9-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு மலைக்கோவில் மாடவீதியில் உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு மேளதாள வாத்தியங்களுடன் சீர்வரிசை கொண்டு வந்தனர்.

முருகப்பெருமான் 2-வதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோவிலுக்குள் செல்லும்போது தெய்வயானை அம்மையார் கோவிலின் பிரதான வாயில் உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது, பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை சமாதானம் செய்து கோவிலுக்குள் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி மூலவர் முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து தங்கவேலுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.