மாசித் திருவிழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில் மாசி திருவிழாவில் தினசரி காலை தோளுக்கினியானில் ரதவீதி புறப்பாடு நடைபெறும்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இந்த உற்சவம் நம்மாழ்வார் விக்ரகம் கிடைத்த மாசி விசாக நட்சத்திரம் முடிய 12 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாளில் காலை 5 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம், 7.45 மணிக்கு நித்தியலைத் தொடர்ந்து 8 மணிக்கு கொடிமரம் முன்னர் நம்மாழ்வார் உற்சவர் எழுந்தருளினார். 8.15 மணிக்கு கொடி பட்டம் மாடவீதி சுற்றி வந்தது. 8.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அர்ச்சகர் கண்ணன் கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தினசரி காலை தோளுக்கினியானில் ரதவீதி புறப்பாடு நடைபெறும். மாலை 6.30 மணிக்கு பரங்கி நாற்காலி. பூம்பல்லாக்கு, புன்னைமர வாகனம், திருப்புளியடி வாகனம் என தினமும் ஒரு வாகனத்தில் பகவான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். மார்ச் 2 ந்தேதி கருடசேவை, 6 ந்தேதி தேரோட்டம், 7, 8 ஆகிய நாட்களில் தெப்ப உற்சவம் நடைபெறுகின்றது.