மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம், மேலமங்கைநல்லூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலய ஆடி மாத தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மேலமங்கைநல்லூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 27-ம் தேதி ஆடி மாத தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு, கர்ணன் பிறப்பு, ஸ்ரீ தர்மர் பிறப்பு, திரௌபதியம்மன் பிறப்பு, வில்வளைப்பு, திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் தூது, அரவான் பலியிடுதல், சக்கர தரிசனம், கர்ணமோட்சம், கூந்தல் முடிதல் போன்ற சிறப்புமிக்க புராண நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்றது.
விழாவின் 21 ஆம் நாள் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பம்பை மேளம் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு, மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கிராமத்தை சுற்றி கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சக்தி கரக நடனம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. விழாவில ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.