பால்குட ஊர்வலம் 
ஆன்மிகம்

மயிலாடுதுறை வீரமா காளியம்மன் கோவிலில் பால்குட உற்சவம்

பால்குட ஊர்வலத்தில், பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் சிவன், பார்வதி மேடம் அணிந்து கலைஞர்கள் நடனமாடியபடி வந்தனர்.

தரங்கம்பாடி,

மயிலாடுதுறையில் மகா வீரமா காளியம்மன் கோவிலில் 126ஆம் ஆண்டு பால்குட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா வீரமா காளியம்மன் கோவில் உள்ளது. திருவாரூர் மெயின் ரோட்டில் உள்ள இந்த கோவிலில் 126ஆம் ஆண்டு பால்குடம் மற்றும் காவடி உற்சவம் இன்று நடைபெற்றது. ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, காவேரி துலா கட்டத்தில் இருந்து கங்கணம் கட்டிக்கொண்டு மேள தாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் சிவன், பார்வதி மேடம் அணிந்து கலைஞர்கள் நடனமாடியபடி வந்தனர். 12 அடி நீள அலகு குத்தியும், கூண்டு காவடிகள் எடுத்தும் பக்தர்கள் ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.