கன்னியாகுமரி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 1ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி 10ம் தேதி வரை பத்து நாட்கள் மாசிக் கொடைவிழா மற்றும் கடந்த 17ம் தேதி எட்டாம் கொடைவிழா நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித தீர்த்தமாடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று மீன பரணிக் கொடை விழா தொடங்கியது. இதனையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 5 மணிக்கு பால்குளம் கண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து சந்தனகுடம் பவனி, 6 மணிக்கு தங்கரதம், 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு தக்கலை, திங்கள்நகர், குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.