சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா 
ஆன்மிகம்

கொட்டாரத்தில் சிம்ம வாகனத்தில் முத்தாரம்மன் வீதி உலா

கொட்டாரம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் ராமநாதபுரத்தில் தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கொடைவிழா 2 நாட்கள் நடந்தது. விழாவின் முதல்நாள் மாலையில் மங்கள இசையும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் சிறுவர்களுக்கான கலைநிகழ்ச்சிகளும் இரவு அலங்கார தீபாராதனையும் பரிசு வழங்குதலும் நடந்தது.

விழாவின் 2-ம் நாள் காலையில் கோமாதா பூஜை, தீபாரானையைத் தொடர்ந்து, அம்மன் கற்பக விநாயகர் ஆலயத்தில் இருந்து சந்தனக்குடம் எடுத்துவர, பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள் பொடி, களபம், சந்தனம், குங்குமம், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் அலங்கார தீபாராதனையும் அன்னதானமும் நடந்தது.

மாலையில் தீபாராதனையும் ருத்ரபூமி படுக்கைக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.