கையில் வேப்பங்குச்சியுடன் கோவிலுக்கு வந்த நகரத்தார்கள் 
ஆன்மிகம்

வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை

நகரத்தார்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட வேப்பங்குச்சியை கையில் எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வமுத்துக்குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி ஆகிய சாமிகள், தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய் அன்று நகரத்தார் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நகரத்தார் திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தஞ்சை, சேலம் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள நகரத்தார்கள் சித்திரை 1-ந்தேதி முதல் தங்கள் வீட்டில் வேப்பங்குச்சியில் மஞ்சள் துணி கட்டி வைத்து வழிபாடு செய்து வந்தனர்.

மேற்கண்ட ஊர்களில் இருந்து நகரத்தார்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட வேப்பங்குச்சியை கையில் எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டு வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு வைத்தீஸ்வரன் கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து கோவில் கொடிமரம் முன்பு தங்களது பிரார்த்தனையை வேண்டிக்கொண்டு தாங்கள் கொண்டு வந்த வேப்பங்குச்சிகளை கொடிமரத்தில் விட்டுச்சென்றனர்.

பின்னர் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்ல முத்துகுமாரசாமி உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.