ஆன்மிகம்

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் திருத்தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

23-ம் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

24- ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு புஷ்ப விமான புறப்பாடும், 25- ஆம் தேதி ராஜமுடி சேவை மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

25-ஆம் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வராக புஷ்கரணியில் தீர்த்தவாரியும், திருமஞ்சனம், வசந்த உற்சவமும் மற்றும் கருட வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 

SCROLL FOR NEXT