கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

நாமக்கல்: பொத்தனூர் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தசதானம், தசதரிசனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

பரமத்தி வேலூர், ஜூன்.8-

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெள்ளாளர் தெருவில் உள்ள பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 5-ந்தேதி காலை மங்கள கணபதி யாக வேள்வி, கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலையில் வாஸ்து சாந்தி, பூமி பூஜை, சக்தியை திருக்குடத்தில் எழுந்தருள செய்தல் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை செல்வநாயகி பூஜை, மகா பூர்ணாகுதி, 108 மூலிகைகளால் யாக வேள்வி, இரவு கோபுர கலசம் வைத்தல் மற்றும் அம்மனுக்கு எண் வகை மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று அதிகாலை 4 மணியளவில் யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடும், காலை 7.30 மணிக்கு மேல் கலசங்களை மூலாலயம் எழுந்தருள செய்து ஆனந்த விநாயகர், பகவதியம்மன், குழந்தை வேலாயுதசாமி, துர்க்கையம்மன், கருப்பண்ணசாமி ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அபிஷேகம், தசதானம், தசதரிசனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பொத்தனூர், வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.