கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

நாமக்கல்: வேட்டாம்பாடி செல்வ கணபதி, மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

பிரதான சாலையில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்லி அம்மன், ஸ்ரீகன்னிமார் மற்றும் ஸ்ரீகருப்பண்ண சுவாமி கோவில்களில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹுதி இன்று காலையில் முடிந்ததையடுத்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் கலசங்கள் கோபுரத்தை அடைந்ததும், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

போக்குவரத்து மாற்றம்

நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள வேட்டாம்பாடி பஸ் நிறுத்தம் அருகே இக்கோவில்கள் உள்ளன. இதில் மாரியம்மன் கோவில் பிரதான சாலையை ஒட்டி அமைந்திருப்பதால் அந்த கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தபோது சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். அவர்கள் சாலையிலே நின்று தரிசனம் செய்ததால் அவ்வழியாக செல்ல இருந்த வாகனங்கள் சிறிது நேரம் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

கும்பாபிஷேகத்தை அடுத்து செல்லியம்மன் கோவில் பின்புறம் காலியாக உள்ள மைதானத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகம் முடிவடைந்ததை அடுத்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நாள்தோறும் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா மற்றும் வேட்டம்பாடி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.