விக்கிரமசிங்கபுரம்,
பாபநாசத்தில் பிரசித்திபெற்ற உலகாம்பிகை சமேத பாபநாச நாதர் கோவில் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
9-ம் திருநாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொம்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தேருக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.
சிறப்பு பூஜைக்கு பிறகு எம்எல்ஏ இசக்கி சுப்பையா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘சிவ சிவா அரகரா’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேரானது நான்கு ரத வீதிகளின் வழியாக சென்று மீண்டும் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தேர் நிலையத்தை வந்தடைந்தது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை விசுவை முன்னிட்டு நாளை மதியம் தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும், நள்ளிரவில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருமண கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சி கொடுத்தலும் நடைபெறும்.