திருப்பதி ஏழுமலையான் கோவில் 
ஆன்மிகம்

திருப்பதி நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள்.. நாளை முதல் முன்பதிவு செய்யலாம்

சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் (ரூ.300) ஒதுக்கீடு 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நவம்பர் மாதம் வழிபட பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் குறிப்பிட்ட தேதியில் முன்பதிவு செய்யலாம், என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நவம்பர் மாதம் வழிபட நாளை முதல் (ஆகஸ்ட் 18) திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

அதன்படி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 18-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

எலக்ட்ரானிக் குலுக்கலுக்கு 20-ந்தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். குலுக்கல் மூலம் டிக்கெட்டுகள் கிடைத்தவர்கள் 20 முதல் 22-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் தரிசன கட்டணம் செலுத்த வேண்டும்.

அத்துடன் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, புஷ்ப யாகம் ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

விர்ச்சுவல் சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 21-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ரூ.300 டிக்கெட்

அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அத்துடன் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நீண்ட கால நோயாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் (ரூ.300) ஒதுக்கீடு 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான பல்வேறு தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளுக்கான ஒதுக்கீடு 25-ந் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற்றும் பல்வேறு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://ttdevasthanams.ap.gov.in) பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். தரிசன டிக்கெட்டுகள் கிடைத்த பக்தர்கள், குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.