ஆன்மிகம்

ஆண்டு கணக்கில் பூட்டி கிடந்த காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் திறப்பு

ஆண்டு கணக்கில் பூட்டி கிடந்த காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காஞ்சீபுரம்:

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சீபுரம் ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலின் 4-ம் பிரகாரத்தில் அமைந்துள்ளது ஆயிரங்கால் மண்டபம்.

இந்த மண்டபமானது எவ்வித பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடந்தது. இம்மண்டபத்தில் மேல்தளங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெறும். மற்ற நாட்களில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மேல் தளத்திற்கும், உள் பகுதியிலும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் இம்மண்டபமானது கடந்த 2011-ம் ஆண்டு ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

பங்குனி உத்திர திருக்கல்யாணத்தின் போது ஏகாம்பரநாதர் வீதியுலா செல்ல இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் வழியாகவே வெளியில் வருவார். மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்படும்.

இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபமானது திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பல ஆண்டுகளாய் மூடப்பட்டிருந்த ஆயிரங்கால் மண்டபமானது தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியுடன் சென்று சிற்ப கலைகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT