திருமலை:
திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் நாராயணகிரி தோட்டத்தில் அமைந் துள்ள பரிணய உற்சவ மண்டபத்தில் பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் 3 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் நேற்று முன்தினம் திருமலையில் தொடங்கியது.
இந்த உற்சவம் நடக்கும் மண்டபம் பல வண்ண மலர்களால் பூலோக வைகுண்டத்தைபோல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மண்டப அலங்காரத்துக்காக 2 டன் பாரம்பரிய மலர்கள், அரை டன் பழங்கள், 30 ஆயிரம் கொய் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. 100 தோட்டப்பணியாளர்கள், 50 மின்சாரப் பணியாளர்கள் இணைந்து மண்டபத்தை பிரமாண்டமாக அலங்கரித்தனர்.
அந்த மண்டபம் மகாவிஷ்ணு, கஜலட்சுமி, தாமரையில் மகாவிஷ்ணு, கோபால கிருஷ்ணர், அஷ்டலட்சுமி வடிவங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் மின்விளக்கு அலங்காரங்கள் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன.
வைசாக சுத்த நவமி நாளான நேற்று முன்தினம் முதல் நாளில் மலையப்பசுவாமி கஜ (யானை) வாகனத்தில் எழுந்தருள, உபயநாச்சியார்கள் தனிப் பல்லக்கில் எழுந்தருள மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலில் இருந்து பரிணய உற்சவ மண்டபத்தை அடைந்தனர். அங்கு ஆஸ்தானம், ஊஞ்சல் சேவை ஆகியவை நடந்தன. அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்ததும் உற்ச வர்கள் நாராயணகிரி தோட்டத்தில் இருந்து கோவிலுக்கு திரும்பினர்.
உற்சவத்தின் 2-வது நாளான நேற்று குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நாராயணகிரி தோட்டத்தை அடைந்தார். தாயார்கள் தனி பல்லக்குகளில் உற்சவ மண்டபத்தை அடைந்தனர். அங்கு, திருமண உற்சவ சடங்குகள் நடைபெற்றன. பின்னர் உற்சவர்கள் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டு, பரிணய உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.